மக்கள் நீதி மய்யம் சார்பில் 2வது நாளாக இன்று வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது., நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்.!

மக்கள் நீதி மய்யம் சார்பில் 2-வது நாளாக இன்று வேட்பாளர் நேர்காணல் – கமல்ஹாசன் தலைமையிலான குழு நேர்காணல் நடத்துகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் நேர்காணல் என தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் நேற்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த, நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை அழைத்து, கமல் தலைமையிலான தேர்வு குழுவினர் நேர்காணல் நடத்தினர்.

இந்த நேர்காணலில் துணை தலைவர் மகேந்திரன், பழ.கருப்பையா உள்ளிட்ட  முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நேர்காணலில், வேட்பாளரின் சொத்து விபரம், தனித் திறன், கல்வி உள்ளிட்ட விபரங்களுடன் தேர்தலில் நிற்பதற்கான காரணம், ஊழல் செய்தால் வெளியேற்றப்படுவோம் என்ற உறுதிமொழி உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது நாள் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நெல்லை, கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இருந்து விருப்ப மனு கொடுத்த நபர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, மார்ச் 7ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும், நாளை தேர்தல் பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்