தொழிலதிபர் ராஜ் குந்த்ரா….119 ஆபாச வீடியோக்களை ரூ .9 கோடிக்கு விற்க திட்டம்.!

ஆபாச வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக மும்பை குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகளில் வெளியிட்டதாக ஜூலை 19 அன்று பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.அதன்பின்னர்,அவர் இரண்டு மாதங்கள் நீதிமன்றக் காவலில் இருந்தார்.

இதனையடுத்து, கடந்த 15 ஆம் தேதி ராஜ் குந்த்ரா உட்பட 4 பேர் மீது 1,467 பக்க கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்தது. காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,ஆபாச படங்கள் தயாரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ராவுக்கு ரூ.50,000 உத்தரவாதம் தொகை விதித்து மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.எனினும்,இந்த வழக்கு பிப்ரவரியில் பதிவு செய்யப்பட்டதில் இருந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில்,தொழிலதிபர் ராஜ் குந்த்ராவின் மொபைல், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிரைவிலிருந்து 119 ஆபாச வீடியோக்களைக் கண்டறிந்ததாகவும், அவர் இந்த வீடியோக்களை ரூ .9 கோடிக்கு விற்க திட்டமிட்டு இருந்ததாகவும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும்,இந்த வழக்கில் (ஆபாச வழக்கில்) தலைமறைவாக உள்ள குற்றவாளிகளான அரவிந்த் ஸ்ரீவஸ்தவா என்ற யாஷ் தாக்கூர் மற்றும் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவின் உதவியாளர் பிரதீப் பக்ஷிவுக்கு எதிராக மும்பை குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.