#BreakingNews : அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

கடந்த 23-ஆம் தேதி சென்னை வாலாஜாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார். இதில், 25,26 தேதிகளில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் இன்று தொடங்கியது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில், தமிழகத்தில் அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.59-ல் இருந்து 60-ஆக உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.