#BREAKING : முதல்வர் வேட்பளார் யார் ? உரிய நேரத்தில் முடிவு – அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்

அதிமுகவின் முதல்வர் வேட்பளார் யார் ? என்று உரிய நேரத்தில் முடிவு  செய்யப்படும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும்.அதில் மாற்று கருத்தே இல்லை. சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.

இதன் பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் கான்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே என்று பதிவிட்டார்.இதனால் அதிமுகவில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்தது.

இதனிடையே இன்று சென்னை, ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி.முனுசாமி,சட்ட அமைச்சர் அமைச்சர் சி.வி. சண்முகம் , வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

இதன் பின்னர் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டது. அதிமுகவின் முதல்வர் வேட்பளார் யார் ? என்று உரிய நேரத்தில் முடிவு  செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.