#BREAKING: டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

டாஸ்மாக் மதுபான ஊழியர்களுக்கு தலா ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவிப்பு.

இன்று தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அதன்படி, 2021 ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் கூடுதலாக தொகுப்பூதியம் வழங்கப்படும் என கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுவின் மூலம் வரும் வருவாய் கடந்த ஓராண்டில் மட்டும் 75% குறைந்துள்ளது. ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் எண்ணம் அரசிற்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களில் 1200 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிலுவையில் உள்ளது. தமிழகத்தை மின் மிகை மாநிலமாக உயர்த்த தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வேளாண் உற்பத்தியை அதிகரிக்க 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் சூரிய மின்சக்தி பூங்கா தொழில்நுட்பம், வர்த்தக ரீதிலான அடிப்படையில் நிறுவப்படும். 40,000 மெகாவாட் சூர்ய ஒளி மின் உற்பத்தி நிலையம், 20,000 மெகாவாட் சேமிப்பு திட்டத்துடன் நிறுவப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் 71,000 டன் நிலக்கரியை காணவில்லை என்றும் அனல்மின் நிலைய பதிவேட்டிற்கும் நிலக்கரி இருப்பிற்கும் வித்தியாசம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வடசென்னை அனல்மின் நிலையத்தில்   2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போனதாக புகார் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்