#BREAKING : மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டி

#BREAKING : மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டி

மாநிலங்களவை தேர்தலில்  மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது போல தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றது.அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற முக்கியமான கட்சி மதிமுக ஆகும்.மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.

இன்று மதிமுகவின் உயர்நிலைக்குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதில் மாநிலங்களவை தேர்தலில்  மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதனை அடுத்து வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே  மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் , இருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர் வைகோ.நேற்று திமுக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube