#BREAKING : ‘மன்னித்து கொள்ளுங்கள்’ – நான் பிஜேபி இல்லை : இயக்குனர் பாக்யராஜ்

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குனர் பாக்யராஜ் கூறியிருந்த நிலையில், மன்னிப்பு கோரியுள்ளார். 

சென்னை கமலாலயத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ், இந்தியாவுக்கு மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தான் தேவை. பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு செல்வதை சிலர் கிண்டல் செய்கின்றனர். ஆனால் இந்த வயதிலும் இத்தனை நாடுகளுக்கு எப்படி பயணிக்கிறார்? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் என்று வியக்கிறேன். தன் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருக்கிறார். எனவே, பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தார்.

பாக்யராஜின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ள நிலையில், மன்னிப்பும் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு மாதம், இரண்டு மாதம் முன் பிறக்கும் குழந்தைகளை குறைபிரசவம் என்பார்கள். ஆனால் குறை இருக்காது. நான் பேசியது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகளின் அக்கறையுடன் பார்ப்பவன். இப்போது இல்லை. எப்போதுமே அப்படித்தான் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில் நான் பிஜேபி இல்லை. தமிழகத்தில் பிறந்து, தமிழில் படித்து, தமிழ் சினிமா என்று வளர்ந்து வந்துள்ளேன். தமிழ் தான் இதுவரை எனக்கு சோறு போட்டுள்ளது. நான் திராவிட இயக்க தலைவர்களை பார்த்து வளர்ந்தவன்.  திராவிட இயக்க தலைவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் தான் எனது சினிமா இருக்கும். இனியும் அது தொடரும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.