#BREAKING: வன்முறை ஏற்பட்டதை அடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு.!

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஒருபக்கம் குடியரசு தின விழா நடக்கும் மறுபக்கம் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கு, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்றனர். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே பேரணியை தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசினர். மேலும் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடந்துள்ளது.

இதையடுத்து, டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகள் விவசாயக் கொடியை ஏற்றினர். வன்முறை தீவிரமடைந்து வருவதை அடுத்து, போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குடியரசு தலைவர் இல்லம், பிரதமர் மோடி இல்லம், நாடாளுமன்றம் வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராடும் பகுதிகளிலும், டெல்லியின் எல்லை மற்றும் பெரும்பாலான இடங்களில் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு, எங்களுக்கும் சம்மந்தமில்லை என பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது. போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு வன்முறையை அரங்கேற்றியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என காவல்துறை கோரிக்கை வைத்துள்ளது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை ஈடுபட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்