#BREAKING: தமிழ்நாட்டில் ஜன.10 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – முதலமைச்சர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஒமைக்ரான் தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது. இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முக்கிய துறைகளின் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை என்றும் மழலையர், விளையாட்டு பள்ளிகள் மற்றும் நர்சிங் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அனைத்து திரையரங்குகளிலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜன.10ம் தேதி வரை துணிக்கடை, நகைக்கடை, உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோவில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. உணவகம், விடுதிகளில் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் மட்டுமே அனுமதி.

ஜன.10ம் தேதி வரை சலூன்கள், அழகு நிலையங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜன.10ஆம் தேதி வரை சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தற்போதைய நடைமுறை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 9 முதல் 12-ஆம் வகுப்பு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது. வழிபாட்டு தலங்களை பொறுத்தளவில் தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகளே தொடரும் என்றும் அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் தற்போது ஒத்திவைப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்