#Breaking:பப்ஜி மதனின் ஜாமீன் மனு – உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானதையடுத்து,சென்னை சைபா் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கைதான மதன்:

இதனையடுத்து,பப்ஜி மதன் தலைமறைவான நிலையில்,அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.பின்னர்,போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி தருமபுரி அருகே பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர்.

குண்டர் சட்டம் – சிறையில் அடைப்பு:

இதனையடுத்து,பப்ஜி மதன் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்த நிலையில்,சிறையில் அடைக்கப்பட்டார்.எனினும்,பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவிற்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,பப்ஜி மதன் மீதான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஆபத்தான விவகாரம்:

இதனைத் தொடர்ந்து,தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனு தாக்கல் செய்தார். ஆனால்,மனு மீது உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.இது மிகவும் ஆபத்தான விவகாரம் என்பதால் தற்போது எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி பப்ஜி மதன் மனுவை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து,இந்த வழக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில்,பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமீன் வேண்டும்:

இந்நிலையில்,ஜாமின் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்,பப்ஜி மதன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பிரிவுகளின்படி 3 மாதம் மட்டுமே தண்டனை வழங்க இயலும் என்றும்,ஆனால் மதன் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும்,அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் என மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

ஒத்திவைப்பு:

இதனையடுத்து,பப்ஜி மதனின் ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டுமென காவல்துறையினர் தரப்பில் கோரப்பட்டது.இந்த நிலையில்,பப்ஜி மதன் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.