கைதி முத்து மனோவின் உடலை ஜூலை 2-க்குள் பெற வேண்டும் -மதுரைக் கிளை உத்தரவு..!

ஜூலை 2-ம் தேதி மதியம் 3 மணிக்குள் கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என மதுரைக் கிளை உத்தரவு. 

திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ. இவர்  ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக களக்காடு காவல்துறையால் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டார். பின் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி மற்றொரு வழக்கில் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கு சக கைதிகளால் தாக்கப்பட்ட முத்து மனோ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. சிறையில் நடந்த மோதலில் இறந்த கைதி முத்து மனோ உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு, நீதித்துறை விசாரணை நடத்தக்கோரி முத்து மனோ தந்தை பாபநாசம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், ஜூலை 2-ம் தேதி மதியம் 3 மணிக்குள் கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். உடலை பெறாவிட்டால் ஜூலை 2-ம் தேதி இரவு 7 மணிக்குள் மாவட்ட நிர்வாகமே இறுதி சடங்கு நடத்தி முடிக்கலாம் என மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டபின் கோரிக்கை குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்யும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author avatar
murugan