#BREAKING: வன்முறை, சாதி சண்டை, மத மோதல்கள் இல்லை – பேரவையில் முதலமைச்சர் உரை..

குழந்தைகள் மீதான குற்றத்தடுப்புகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் பேச்சு. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், கடந்த ஓராண்டு காலத்தில் அனைத்து துறைகளும் எத்தகைய வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை அறிந்துள்ளீர்கள். தமிழகத்தில் வன்முறைகள் இல்லை, அராஜகங்கள் இல்லை, மத மோதல்கள், சாதி சண்டை,  துப்பாக்கிசூடுகள் உள்ளிட்ட எதுவும் இல்லை. இந்தியாவிலேயே அமைதியான, பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு எனும் நற்பெயர் மீண்டும் கிடைத்துள்ளது.

குற்றங்களே நடக்காத வகையில் சூழலை உருவாக்கி தருவதே காவல்துறையினரின் பணி. காவல்துஉரையை யாரும் கைநீட்டி குற்றம் சொல்ல முடியாத துறையாக இருக்க வேண்டும். காவல்துறையினர் ஒவ்வொருவரும் விமர்சனத்திற்கு இடமில்லாமல் பணியாற்ற வேண்டும். எந்த திசையில் இருந்து சிபாரிசு வந்தாலும் சட்டத்தின் பக்கம் நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒதுக்குங்கள் என்றும்  திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மோதல்களை ஏற்படுத்துவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கூலிப்படைகள் முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும். மதம், சாதி, வன்முறையை தூண்டும் பேச்சுக்கள் தடுக்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டுவோரை கண்காணிக்க வேண்டும். அங்கொன்றும், இங்கொன்றும் கூறி காவல்துறையை களங்கப்படுத்த வேண்டாம். சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுதல், குற்றங்களை தடுக்க முன்னுரிமை காவல்துறை – மக்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளன, அதை மீறி நடந்தாலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆய்வு கூட்டங்களை நடத்தி குற்றப்பிரிவு ஆலோசனைகளை கவலை உயரதிகாரிகள் வழங்கியிருக்கிறார்கள்.

தொழிற்சாலை பகுதிகளில் குற்றங்களை தடுக்க தனி காவல்துறை படை அமைக்கப்பட்டுள்ளது. ஓராண்டில் 268 கொலைகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் திருட்டு வழக்குகளில் ரூ.144 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்பட்டது. குன்னுர் ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிகளில் தமிழகம் முன்னின்று களப்பணி ஆற்றியுள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட கடந்த ஓராண்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்தே உள்ளன.

கூலிப்படை விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும். எந்த சூழலிலும் துப்பாக்கிசூடு என்பது ஏற்கக்கூடியது அல்ல, விசாரணைக்காக அழைத்து வருபவர்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்த கூடாது. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, நீதிமன்றத்தின் ஆஜர்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான, இணையவழி குற்றங்கள் குறித்து விசாரணைக்கு முன்னுரிமை தரப்படும். அரசு எப்போதும் எதையும் மறைக்க முயல்வதில்லை, லாக்கப் மரணங்கள் இனி நிகழாது என உறுதியளிக்கிறேன்.

தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பதுக்கிவைத்து, விநியோகம் செய்பவர்கள், கடத்துபவர்களை கண்காணித்து கைது நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா, குட்கா போதைப்பொருட்கள் பழக்கம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. கஞ்சா பயிரிடுவோரை கண்டறிந்து கைது செய்து, அவர்களுக்கு மாற்று தொழில் செய்ய ஏற்பாடு செய்யப்படும். போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக 35,293 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என அறிவுறுத்திருக்கிறேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒழிப்பு ஒருபுறம், விழிப்புணர்வு இன்னொருபுறம் என்ற வகையில் கஞ்சா ஒழிப்பில் அரசு ஈடுபட்டுள்ளது. காவல்துறைக்கு வார விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது, ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத துவேஷங்களை உருவாக்குவோரை தமிழ் மண்ணில் அனுமதிக்க முடியாது. அப்படி செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடவுசீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரவேண்டிய நிலை மாற்றப்படும். மாநிலங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும். விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று தெரிவித்த முதலமைச்சர், காவல்துறையில் 78 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்