#BREAKING : தமிழகத்தில் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை – தமிழக அரசு

இந்தி கற்றுக் கொள்ளாமல், தமிழகத்தில் இருந்து வெளியே செல்லும் மாணவர்கள் அங்கு மொழி தெரியாமல் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, மும்மொழி கொள்கையை ஏன் தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் அர்ஜுன் இளையராஜா என்பவர் தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தமிழக அரசு எடுக்க வேண்டிய முடிவுதான் என்றாலும், மாணவர்கள் ஒருமொழியை கூடுதலாக தெரிந்துகொள்வது நல்லது தான். தமிழகத்தை தவிர, வேறு 2 மாநிலங்கள் இந்த கொளகையை அமல்படுத்தியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோல், இந்தி கற்றுக் கொள்ளாமல், தமிழகத்தில் இருந்து வெளியே செல்லும் மாணவர்கள் அங்கு மொழி தெரியாமல் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, மும்மொழி கொள்கையை ஏன் அரசு அமல்படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழகத்தில் இந்தியை கற்றுக் கொள்ள யாருக்கும் தடை விதிக்கப்படவில்லை. அதேசமயம், இருமொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று தான் தமிழக அரசு கொள்கை முடிவாக எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான பதில்மனுவை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, இந்த வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.