பறக்கும்படை அதிகாரியை மிரட்டிய வழக்கில் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த 12ம் தேதி ஊத்துபட்டி அருகே கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தனது வாகனத்தை மறித்து அடிக்கடி சோதனைவிடுவதாகவும் விசாரணை நடத்துவதாகவும் கூறிய அமைச்சர் பறக்கும்படை அதிகாரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி நாலாட்டின்புத்துார் போலீசில் புகார் அளித்தார். சிவகாசியை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரியான மாரிமுத்துவிடம் தேர்தல் கண்காணிப்பு உயர் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்ட பின்னர் கடம்பூர் ராஜு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜு முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், தேர்தல் பறக்கும்படை அதிகாரியை மிரட்டிய வழக்கில், அரசு தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால் நிபந்தனையின்றி அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.