#Breaking: டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு.!

  • டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது சில மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு.
  • போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் கலவர களமாக மாறியது. இதனை எதிர்த்து அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போன்ற பல அமைப்புகள் அவர்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே இன்று தொடர் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், திடீரென போராட்ட களத்தில் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அப்போது அவர் வானத்தை நோக்கியும், மாணவர்களை நோக்கியும், துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவர் ஒருவர் காயமயடைந்துள்ளார்.

பின்னர் தொடர்ந்து அந்த நபர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவாறு ஜெய் ஸ்ரீ ராம் என்றும், இதோ எடுத்துக்கொள்ளுங்கள் விடுதலை என்றும், கூச்சலிட்டுக் கொண்டே சென்றார். இந்த நிகழ்வு அனைத்தையும், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் முன்னிலையிலேயே நடைபெற்றது. பின்னர் அங்கிருந்த பலரும் மர்ம நபரின் செயலை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். பின்னர் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், அந்த மர்ம நபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மர்ம நபரை காவல்துறை அழைத்து சென்று தீவிர விசாரணையில் அந்த நபரின் பெயர் ராம் பகத் கோபால் சர்மா இவருக்கு 19 வயது என்றும், உத்தர பிரதேசம் மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இவர் கையில் வைத்திருந்தது நாட்டுத் துப்பாக்கி என தகவல் வந்துள்ளது. இதனிடையே அவர் ஒரு குறிப்பிட்ட குழுவை சேர்ந்த மாணவர்களிடம் மறியல் செய்யப்படுவதை கைவிட வேண்டும், சாலை போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்