#Breaking: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு – நீதிமன்றம் தீர்ப்பு!

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி நரம்பியல் மருத்துவர் சுப்பையா சென்னை ராஜா அண்ணாமலைப்புறத்தில் கூலி படையினரால் கொல்லப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியிலுள்ள 2.25 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக கூலிப்படையினர் மூலம் நரம்பியல் நிபுணரான மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்படாத கூறப்பட்டது.

பட்டப்பகலில், மக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நடந்த இந்த கொலை, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 10 பேரை கைது செய்திருந்தனர். இன்று காலை வழக்கு விசாரணையின்போது, மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த கொலை வழக்கில் கைதான 10 பேரில் ஐயப்பன் சரணடைந்த நிலையில், 9 பேரும் குற்றவாளிகள் என முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில், மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்லப்பிராகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனையும், மேரி புஸ்பம், யேசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து, முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி தீர்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளுக்கு இந்த தண்டனையை உறுதிப்படுத்த, முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் (கீழமை நீதிமன்றம்) சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பும் என்பது வழக்கமான நடைமுறையாகும் என கூறப்படுகிறது. மேலும், இந்த தண்டனைகளை எதிர்த்து குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்