“மிகுந்த வேதனை…விடியா அரசே,இதனை தடை செய்” – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

திமுக அரசு,ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பெருங்குடியில் வசிக்கும் வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவருக்கு,தாரா என்ற மனைவியும்,இரண்டு மகன்களும் இருந்தனர். இந்த நிலையில்,தனது மனைவி மற்றும் மகன்களை கொலை செய்து விட்டு மணிகண்டன் தானும் தற்கொலை செய்துள்ளார்.

இந்த தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் சுமையால் மணிகண்டன் தனது மனைவி தாராவை கிரிக்கெட் மட்டையால் அடித்தும், தனது இரண்டு மகன்களையும் தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளதாகவும்,பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம்,தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு திமுக அரசு தடை கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

“ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனால் வங்கி ஊழியர் திரு.மணிகண்டன் அவர்கள் தனது குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும்,இந்த திமுக அரசின் மீது கோபத்தையும் ஏற்படுத்துகிறது. அம்மா அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்திருந்தது,

நீதிமன்ற உத்தரவால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தொடங்கப்பட்டுள்ளது,இளைஞர்கள் மற்றும் பல குடும்பங்களையும் பாழாக்கும் இத்தகைய சூதாட்டத்தை அரசு சட்டம் இயற்றி தடை செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது.உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்”,என்று கேட்டுக்கொண்டுள்ளார்.