#Breaking:பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம் – உச்சநீதிமன்றம் அதிரடி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் உள்ள பேரறிவாளன்,தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்த நிலையில்,அதன் மீதான விசாரணை கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது,பேரறிவாளனை விடுவிப்பதில் பல்வேறு சட்ட சிக்கல் இருக்கிறது எனவும்,குறிப்பாக ஆளுநர், மத்திய உளவு பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்பு, இன்னும் இதுதொடர்பாக முடிவெடுக்காமல் இருக்கிறார்கள் என அடுக்கடுக்கான வாதத்தை பேரறிவாளன் தரப்பு முன்வைத்தது.

அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர்ராவ் அமர்வு கூறுகையில், பேரறிவாளனை விடுவிக்க வேண்டியது தானே, பேரறிவாளனை யார் விடுவிக்க வேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களில் ஏன் ஆளுநர் சிந்திக்க வேண்டும் எனவும்,பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து, பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம் என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே,மத்திய அரசு தரப்பு கூறுகையில், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆளுநர் செயல்படும் விதம் குறித்து கூட ஜனாதிபதியே தான் முடிவெடுக்க முடியும். அரசியல் சாசன பிரிவு 72 மிக தெளிவாக கூறுவதாகவும் வாதத்தை முன்வைத்திருந்தது.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்,மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என்று மத்திய அரசு கூறினால், பேரறிவாளனை உடனே விடுதலை செய்து உத்தரவிடுகிறோம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பு சட்டம்,கூட்டாட்சி தத்துவம் அடிப்படையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தததாக இந்த வழக்கை கருதுவதாகவும், பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்படவேண்டியதுதானே,மாறாக,அமைச்சரவை முடிவை ஆளுநர் ,குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் கூட்டாட்சிக்கான அர்த்தம் என்ன?,மேலும்,அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை.எனவே,இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து நாங்கள் முடிவெடுக்க போகிறோம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும்,வருகின்ற செவ்வாய்க்கிழமைக்குள் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால் அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கும் என கூறிய நீதிபதிகள் வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.