முதல்வர் யோகி மற்றும் யோகா குரு ராம்தேவ் எழுதிய புத்தகங்கள் பாடத்திட்டத்தில் சேர்ப்பு – உத்திரபிரதேச பல்கலைகழகத்தில் பரபரப்பு!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் அம்மாநிலத்திலுள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது சர்சையை கிளப்பியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் நகரிலுள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைகழகத்தில் புதிய கல்விக் கொள்கையின் கீழ் யுஜிசி ஒரு புதிய பாடத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எழுதிய ‘ஹத்தியோகா கா ஸ்வரூப் வா சாத்னா’ மற்றும் ராம்தேவின் ‘யோக சாத்னா வா யோக் சிக்கிட்சா ரஹஸ்யா’ மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகிய இரு புத்தகங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது. இவை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் இளங்கலை தத்துவ பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்ற படிப்பு மேற்கொள்ளக்கூடிய மாணவர்களும் இந்த புத்தகங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடமாக எடுத்து படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் சார்பு துணைவேந்தர் பேராசிரியர் ஒய்.விமலா அவர்கள் கூறுகையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ராம்தேவ் ஆகியோரின் படைப்புகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என தத்துவம் குறித்து ஆய்வு வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், இந்த இரண்டு புத்தகங்களையும் மாநில அரசு பரிந்துரைத்துள்ளதுடன் பல்கலைக்கழக ஆய்வு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த புத்தகங்கள் மூலமான படிப்பு மற்றும் பயிற்சி மன அழுத்தம், சிரமம் இல்லாத வாழ்க்கை, நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்தல் போன்றவற்றை வழங்கும் எனவும் மாநில அரசு பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் யோகியின் படைப்புகளை மாநில அரசே பரிந்துரை செய்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் பலர் இது குறித்து விமர்சித்து வருவதுடன், தற்பொழுது சவுத்ரி சரண் சிங் பல்கலைகழக மாணவர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Rebekal