தஞ்சை மாநகராட்சி மயானத்தில் 15 மணி நேரமாக தொடர்ந்து எரியூட்டப்படும் உடல்கள்

தஞ்சை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாநகராட்சி மயானத்தில் ஒரு நாளைக்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து 15 மணி நேரமாக எரியூட்டப்பட்டு வருவது மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 38,000 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 33,000 பேர் இதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 450 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சையில், நேற்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு முன்னர் தஞ்சை ஈஸ்வரி நகரின் சாந்திவனம் மின்மயானத்தில் ஒரு மாதத்திற்கு 10 முதல் 15 உடல்கள் எரியூட்டப்பட்டு வந்தது. ஆனால், இந்த கொரோனா தொற்றினால் தற்போது இந்த மின்மயானத்தில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து ஒரு நாளைக்கு 10 முதல் 15 உடல்கள் எரியூட்டப்படுவது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கே இறப்பவர்களின் உடல்கள் அதிகமாகி கொண்டிருப்பதால் உடல்களை எரியூட்டுவதற்கு டோக்கன் முறையை செயல்படுத்தி வருகின்றனர்.  அதனால், இந்த பகுதியில் ஒரு நாளைக்கு 15 மணி நேரங்களாக தொடர்ந்து மின்மயானம் செயல்பட்டு வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.