பாடத்திட்டங்களை மாற்றும் பணி முடியும் வரை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனைப் பணியிடமாற்றம் செய்யத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தலைமைச் செயலக வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின. இதனால் உதயச்சந்திரனுக்கு ஆதரவாகப் பல்வேறு தரப்பினரும் களமிறங்கினர். இந்தநிலையில், பாடத்திட்டங்களை மாற்றும் பணி முடியும் வரை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனை இடமாற்றம் செய்யக் கூடாது, பாடத்திட்டங்களை வகுக்கும் குழுவை நீதிமன்றக் கட்டுப்பாட்டில் செயல்பட உத்தரவிடக் கோரி ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பாடத்திட்டங்களை மாற்றும் பணி முடிவடையும் வரை உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்யத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் குழு இதுவரை என்ன பணி செய்தது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 21-க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.