கடும் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா.மீண்டும் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான முரசொலி நாளிதழின் பவளவிழா கொண்டாட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று விழா தொடங்கிய சிறிது நேரத்தில் கன மழை பெய்ததால் விழா ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பவளவிழா மீண்டும் ஒரு நாளில் சிறப்பாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முரசொலி நாளிதழின் பவளவிழா ஆதஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் சென்னை திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கத்தில், வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பவளவிழா பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை ஐந்தரை மணிக்கு பவளவிழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி தொடங்கியது. திறந்தவெளி மேடையில் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.
இந்த கூட்டத்துக்கு, தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலக்குறைவால் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
திமுக  முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமையேற்று, அன்பழகனின் வாழ்த்து செய்தியை வாசித்தார். இந்தநிலையில், வானில் கருமேகங்கள் சூழ்ந்து தொடக்கத்தில் சாரல் மழை விழுந்தது. இதில் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் அனைவரும் நனைந்தபடியே, மேடையில் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் மழை பலமாக பெய்யத்தொடங்கியது.
மழை மேலும் அதிகரித்ததால், மேடையில் இருந்தவர்களுக்கு குடை பிடிக்கப்பட்டது. கொட்டும் மழையிலேயே திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணும் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். முரசொலி பவளவிழா மலரை ஆர்.நல்லக்கண்ணு வெளியிட்டார்.
தொடர்ந்து கனமழை பெய்ததால் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் மழையால் ஒத்திவைக்கப்படுகிறது என்றும் மற்றொரு நாளில்  இதைவிட சிறப்பாக, மீண்டும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என மு.கஸ்டாலினி தெரிவித்தார்.

author avatar
Castro Murugan

Leave a Comment