புரோ கபடி: சொந்த மண்ணில் படு தோல்வியைச் சந்தித்தது தமிழ் தலைவாஸ்.

புரோ கபடி லீக் சீசன் – 5 தொடரின் சென்னை சுற்றுப் போட்டிகளை சொந்த மண்ணில் தோல்வியுடன் தமிழ் தலைவாஸ் அணி தொடங்கி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டிகள் இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகள் அடுத்து பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில், சென்னை சுற்று ஆட்டம் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றுத் தொடங்கியது. இதில் 11 ஆட்டங்கள் நடைபெறுகிறது.
நேற்றைய லீக் போட்டியில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, தீபக் ஹூடா தலைமையிலான புனேரி பால்டன் அணியுடன் மோதியது.
இந்தப் போட்டியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் தலைவாஸ் இணை உரிமையாளர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
பிரபல சினிமா நடிகர் சித்தார்த் தேசிய கீதம் பாட போட்டி செவ்வணே தொடங்கியது. இதில் சொந்த மண்ணில் களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி ஆரம்பம் முதல் அதிரடியாக புள்ளிகளைச் சேர்த்தது.
முதல் பாதியின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 12-11 என முன்னிலைப் பெற்றது.
பின்னர் தொடங்கிய 2-வது பாதியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை கைப்பற்ற ஒருக் கட்டத்தில் 25-16 என்ற கணக்கில் புனேரி அணி முன்னிலைப் பெற்றது.
கடைசி நேரம் வரை போராடியும், தமிழ் தலைவாஸ் அணியால் புனே அணியின் முன்னிலையை முந்த முடியவில்லை.
இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 20-33 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி அணியிடம் படு தோல்வியைச் சந்தித்தது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment