அனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை என்று காட்டமாக தெரிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவருடைய தற்கொலைக் குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா – இன்று இல்லை. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.
அரியலூர் குழுமூரைச் சேர்ந்தவர் அனிதா. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சண்முகம் கூலித் தொழிலாளி. பிளஸ் 2 தேர்வில் இவர் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட் ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார்.ஆனால், நீட் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை இழந்தார். நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே அவர் எடுத்திருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) தற்கொலை செய்துகொண்டார். சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அனிதா தனது கனவு தகர்ந்ததால் மன அழுத்தத்தில் இருந்தார். மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என அனிதாவின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.