கோவில்பட்டியில் கிராம மக்கள் சாலைமறியல்

கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே விவசாய கிணற்றிலிருந்து தண்ணீர் விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து, 2–வது நாளாக கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தண்ணீர் விற்பனைக்கு எதிர்ப்பு

கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரத்தில் தனியார் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் அங்கு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த அரசு அதிகாரிகள், விவசாய நிலங்களில் இருந்து தண்ணீரை விற்பனை செய்ய தடை விதிப்பதாக கூறினர்.

சாலை மறியல்

ஆனாலும் நேற்று காலையில் கெச்சிலாபுரம் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து சிலர் மினி டேங்கர் லாரி மூலம் தண்ணீரை எடுத்து விற்பனைக்காக கொண்டு சென்றனர். உடனே அங்கு வந்த கிராம மக்கள், அந்த மினி டேங்கர் லாரியை சிறைபிடித்து, 2–வது நாளாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

கோவில்பட்டி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தண்ணீர் விற்பனை செய்த விவசாய நிலத்தின் உரிமையாளரிடம் அதிகாரிகள் பேசினர்.
அப்போது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து மோட்டாரை அப்புறப்படுத்துமாறும், அங்கிருந்து தண்ணீரை விற்பனை செய்தால் மோட்டாரை பறிமுதல் செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
author avatar
Castro Murugan

Leave a Comment