கம்யூனிசம் என்றால் என்ன?



நாட்டில் இருக்கும் பல ஓட்டுக்கட்சிகளை போல அதுவும் ஒரு ஓட்டுக்கட்சி. உலகில் இருக்கும் பல கொள்கைகளை போல அதுவும் ஒரு கொள்கை. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகியல் பார்வை. முதலாளித்துவத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை. இப்படி பலவாறான மதிப்பீடுகள் கம்யூனிசத்தைப் பற்றி மக்களிடம் இருக்கிறது. ஆனால் கம்யூனிசம் என்பது ஒரு இயல்பு. மனிதர்களின் இயல்பான ஒரு உணர்வு. சாலையில் நடந்து செல்லும் ஒருவர் அங்கு ஒருவன் மற்றொருவனை அடித்து உதைத்துக்கொண்டிருப்பதை கண்டால், பாதிக்கப்பட்டவனின் சார்பில் பாதிப்பவனை தடுத்து நிறுத்த முன்வருவாரே அதன் பெயர் தான் கம்யூனிசம். அந்த உணர்வு தான் கம்யூனிசத்தின் சாரம். அந்த உணர்வை பரந்துபட்ட தன்மைகளுடன், பின்னணி, விளைவுகள் குறித்த பார்வையோடு  உலகளாவிய நிகழ்வுகளுடன் பொருத்தி அதற்கான தீர்வுகளை சிந்தித்தால் அதன் பெயர்தான் கம்யூனிசம்.
இருக்கும் பலவிதமான அரசியல் கட்சிகளைப் போல ஆட்சிக்கு வருவதை மட்டுமல்ல யாருக்கான அரசாக இயங்குவது என்பதையே முதன்மைப் படுத்துவதால் இருக்கும் கட்சிகளிடையே கம்யூனிசம் மாறுபாடுடையது. மக்களின் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் காரணம் தேடி மருளவைக்கும் சொற்களால் மலட்டுப்பரப்புரை செய்யும் கொள்கைகளிடையே “உலகை வியாக்கியானம் செய்வதல்ல அதை மாற்றியமைப்பதே நோக்கம்“ என்று அறிவித்துச் செயல்படுவதால் கம்யூனிசம் தனித்தன்மையுடையது. மனித இனத்தின் பண்டைய வரலாறு முதல் இன்றைய கலாச்சார வீக்கங்கள் ஈறாக அனைத்தையும் அறிவியல் மேடையில் உரசிப்பார்த்து இனங்காண்பதால் பொருளியல் கொள்கை எனும் தூற்றல்களில் நனையாமல் நிற்பது. மனிதர்களின் முடை நாற்றமெடுக்கும் சிந்தனை ஊறல்களை, அது பல்லூழிகளாக தொடர்ந்திருந்தாலும், சுகந்த மணம் தருவதாக நினைத்துக்கொண்டிருந்தாலும், அவைகளை அகற்றி இறுக்கம் தளர்த்தும் வழிமுறைகளுடன் இருப்பதால்; விமர்சனம் சுயவிமர்சனம் எனும் தளத்தில் நிற்பதால் முதலாளித்துவத்திற்கு மட்டும் எதிரானதாக இதை குறுக்கிவிட முடியாது.
கம்யூனிசம் ஒரு மதமல்ல, இங்கு முன்னாசிகளோ முக்கிய தெய்வங்களோ இல்லை. மார்க்சும், ஏங்கெல்சும் படைத்தவற்றை லெனினும், மாவோவும் மேம்படுத்தினர். எனவே இங்கு வேதமும் இல்லை. உழைப்பே இங்கு விதி, போராட்டமே மகிழ்ச்சி.
எல்லாம் சரி, கம்யூனிசம் ஏன் நீடித்த வெற்றியை பெறமுடியவில்லை?
ரஷ்யா, சீனா என்று சோசலிச நாடுகள் இன்று முதலாளித்துவத்தின் பிடியில், சோசலிச தலைவர்களே முதலாளித்துவத்தை மீள்இறக்குமதி செய்தவர்கள். எப்படி நிகழ்ந்தது இது? கம்யூனிச கொள்கைகளின் கட்டுறுதியான தாக்கமும், மக்களிலிருந்து உருவாகிவந்த தலைவர்களின் ஈடுபாடும் அத்தனை நெகிழ்வானதா? புரட்சியை நடத்திய மக்கள் இவர்களின் பிறழ்தலுக்கு எப்படி மெளன அங்கீகாரம் வழங்கினார்கள்? என்றெல்லாம் அலையலையாய் எழுந்துவரும் கேள்விகள். இவைகள் எல்லாவற்றையும் விட பதிலளிக்கத்தகுந்த கேள்வி ஒன்று உண்டு. மக்களின் மன இயல்புகளை புரிந்து கொள்ளாமல், இயற்கைக்கு அப்பாற்பட்டு வரட்டுக் கற்பனையான சூத்திரமாக கம்யூனிசம் இருப்பதனால் தான் கம்யூனிசத்தை நோக்கி நகராமல் சோசலிசம் பின்னடைந்து விடுகிறதா? என்பது தான் அந்தக் கேள்வி.
இந்தக் கேள்வியின் அடிப்படை எங்கிருக்கிறது? சோசலிச சமுதாயத்தில் அல்லது சோசலிச அரசின் கீழ் இருக்கும் மக்கள் கட்டாயமாக தங்கள் உழைப்பை அரசுக்கு செலுத்தவேண்டும் பகரமாக அரசு தரும் ஊதியத்தை பெற்றுக்கொள்ளவேண்டும், அது போதுமானதாக இல்லாமற் போனாலும் கூட. தனியார்மயம் ஒழிக்கப்பட்டு எல்லாமே அரசுடமையாக இருக்குமாதலால், தனிப்பட்ட தகுதிக்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் சமஊதியம் என்ற நிலை இருக்கும் என்பதால் முனைப்பு குறைந்து, ஆர்வம் கலைந்து உற்பத்தி குன்றும். நிர்வாகத்தினர், மூளை உழைப்பாளிகளுக்கு தனிப்பட்ட மரியாதை இல்லாமல் தொழிலாளர்களுடன் சமமாக்கப்படுவதால் அவர்களுக்கு மனரீதியான திருப்தியின்மை ஏற்படுவதால் நிர்வாக சீர்கேடு பெருகும், இதனால் ஊழல் அதிகரிக்கும். ஒருபக்கம் உற்பத்தி குறைவு, மறுபக்கம் நிர்வாக சீர்கேடு இரண்டும் சேர்ந்து சோசலிச அரசை பலவீனமாக ஆக்கிவிடுகிறது. இதனால் தான் சோசலிச அரசுகள் நீடிக்க முடிவதில்லை. இதுதான் அந்த கேள்வியை எழுப்புபவர்கள் சொல்லும் விளக்கம். ஒரு நாட்டில் சோசலிச அரசு எழுவதை ஏகாதிபத்திய அரசுகள் சகஅரசாக வாழ்த்தி வரவேற்கின்றன, ஆனால் கம்யூனிசத்தின் உள்ளீடற்ற தன்மையால் தான் அவைகள் வீழ்கின்றன, இது அந்தக் கேள்வியை எழுப்புபவர்கள் சொல்லவரும் நோக்கம்.
ஒரு நாட்டில் புரட்சியை சமைப்பதல்ல, புரட்சிக்கு பிறகு அதை வளர்த்தெடுத்துச்செல்வது தான் புரட்சியை விட பல மடங்கு கடினமான காரியம். இதற்கு கம்யூனிசம் தோற்றுவிட்டதாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டிருக்கும் இந்தவகை அவதூறுகளே சான்று. ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட்டாலோ அல்லது ஏற்படும் என அஞ்சினாலோ அந்நாட்டின் மீது எல்லாவித அரசியல் ராணுவ நெருக்கடிகளை ஏற்படுத்துவது ஒருபக்கம், கொலை கொள்ளை அடக்குமுறை; பஞ்சம் பட்டினி என்று அவதூறுகளை பொழிந்து கருத்து நெருக்கடிகளை ஏற்படுத்துவது மறுபக்கம். இந்த உலகில் அதிகாரத்தில் இருக்கும் முதலாளித்துவம் வெகுசில நாடுகளில் ஏற்படும் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு எதிராக எடுத்துவரும் இத்தகைய நடவடிக்கைகளே கம்யூனிசத்தின் உள்ளீடு குறித்து ஏகாதிபத்தியங்கள் எந்த அளவுக்கு பீதியடைந்திருக்கின்றன என்பதற்கான சான்று.
கம்யூனிசம், சோசலிசம் இரண்டையும் கலந்துகட்டி குழப்பிக்கொண்டு சொல்லப்படுபவது தான் மேற்கண்டது. எந்த ஒரு தனி நாட்டிலும் கம்யூனிசம் ஏற்பட முடியாது. முதலாளித்துவ ஆட்சியை புரட்சிகர நடவடிக்கையின் மூலம் கைப்பற்றி சோசலிச ஆட்சி ஏற்பட்டதும், தனியார் என்று யாருமே இருக்கமாட்டார்கள் என்பது கற்பனைதான். பன்னாட்டு முதலாளிகளின், தரகு முதலாளிகளின் சொத்துகள் பறிக்கப்பட்டாலும் தேசிய முதலாளிகள், குறு முதலாளிகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் கீழ் தொழிலாளர்கள் வேலைசெய்வார்கள். வித்தியாசம் என்ன? முன்புபோல் வரைமுறையற்று அவர்களால் சுரண்ட முடியாது. சட்டப்பாதுகாப்புடன் தொழிலாளர்கள் இருப்பார்கள். முன்பு சட்டப்பாதுகாப்புடன் முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டிய கொடுமை முற்றுப்பெற்று அந்த சட்டப்பாதுகாப்பு தொழிலாளிகளுக்கு இருக்கும் என்பதை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் தான், தொழிலாலர்களின் ஆர்வம்  குறைந்துவிடும் உற்பத்தி குறையும் உற்பத்தித்திறன் குலைந்து விடும் என்றெல்லாம் கதையளக்கிறார்கள்.
உண்மையில் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறையும் என்பதைவிட முதலாளிகளின் லாபம் குறையும் என்பதுதான் உண்மை. அதுவரை முதலாளித்துவ நிர்வாக முறையின் கீழிருந்த தொழிலாளர்கள் ஒரு சொடுக்கில் மாறிவிடமுடியாது. இது மேலிருந்து திணிக்கப்படுவதுமில்லை. கீழிருந்து படிப்படியாக ஏற்படும் மாற்றம். இதுவரை தங்களின் லாபத்தை மட்டுமே கருதி ஆட்குறைப்பு செய்துவந்த நிறுவனங்கள் சோசலிசத்தின் கீழ் அதனதன் உற்பத்தி அளவீடுகளின் படி தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இந்தவகையில் வேலையில்லாத் திண்டாட்டம் குறையும். தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் உற்பத்தி பெருகும் என்பது தான் உண்மை. இவ்வாறான நிபந்தனைகளை ஏற்கமறுக்கும் நிறுவனங்கள் அரசால் ஏற்கப்படும். புதிதாக வேலை கிடைத்தவர்கள் உற்சாகத்துடன் வேலை செய்வர் என்பதுடன் முன்பு தனிப்பட்ட முதலாளியின் லாபத்திற்காக உழைத்தவர்கள் தற்போது நாட்டுக்காக தமக்கான முன்னேற்றத்திற்காக உழைப்பர். இந்தப் புரிதலையும், விழிப்புணர்வையும் அரசு செய்யும். அத்தோடு முதலாளிகளின் கொடுமையை நேரடியாக அனுபவித்து எதிர்த்துப் போராடியவர்கள் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் உழைப்பர் என்பதும் உண்மை. ஜார் ரஷ்யாவில் 2.1 கோடி ரஷ்ய பவுண்டாக இருந்த விவசாய உற்பத்தி 1930களில் 11 கோடி ரஷ்ய பவுண்டாக அதிகரித்தது. தொழில் துறையில் 1928ம் ஆண்டு உற்பத்தியை 100 விழுக்காடு என்று கொண்டால் 1927ம் ஆண்டு 82.4 விழுக்காடும் 1929ம் ஆண்டு 123.5 விழுக்காடும் 1930 ம் ஆண்டு 171.4 விழுக்காடும் உயர்ந்துள்ளது. (இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் – இரயாகரன்) எனவே புரட்சிக்குப் பின் உற்பத்தி கூடியுள்ளதேயன்றி குறையவில்லை.
கூட்டுப்பண்ணைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவர்களுக்கு ஒரேமாதிரியான சம்பளம் இருப்பதுதானே நீதியானது. இப்போது ஒரே மாதிரியான வேலையை செய்பவருக்கு ஆணுக்கு ஒரு ஊதியமும் பெண்ணுக்கு அதைவிட குறைவான ஊதியமும் வழங்கப்படுவதை முணுமுணுக்காமல் ஏற்றுக்கொள்பவர்கள், சமவேலைக்கு சமஊதியம் என்பதை குறையாக சொல்கிறார்கள் என்பதைக்கொண்டு அவர்களின் நோக்கத்தை அளவிட்டுக் கொள்ளலாம். உண்மையில் கருங்காலித் தொழிலாலர்களை சலுகைகள் கொடுத்து தங்களுக்கு கைக்கூலியாக செயல்படவைக்க முடியாது என்பதுதான் இப்படி முலாம்பூசி வெளிப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் படிப்படியாக பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றமடைவதை, முதலாளித்துவ நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களுடன் ஒப்பிட்டு வேலை செய்யமாட்டார்கள், ஊழல் பெருகும் என்றெல்லாம் கவலையுறுபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் சீரழிவும், ஊழலும் தனியார்மயத்தின், தனியுடமையின் விளைவுகள் என்பதை மறந்து விடுகிறார்கள். தனியார்மயத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்படுகின்றன. நல்ல லாபமீட்டும் நிறுவனங்கள் கூட பலநூறு கோடி சொத்துக்களுடன் சில கோடிகளுக்கு விற்கப்படுவது மக்களை காப்பதற்காகவா இல்லை அந்த மக்களை சுரண்டுவதற்காகவா? பொதுத்துறை நிறுவனங்களில் லஞ்ச ஊழல் பெருத்துவிட்டது, தனியாரிடம் இருந்தால் தான் சிறப்பான நிர்வாகம் கிடைக்கும் என்று தனியார்மயத்திற்கு குடைபிடிப்பவர்கள் தனியார் நிறுவனங்களின் ஊழலையும், முறைகேடுகளையும் காட்டி ஒருபோதும் அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கோரமாட்டார்கள். காரணம் அவர்களின் கோரிக்கைகள் வர்க்க நலனிலிருந்து வெளிப்படுபவையே அன்றி நிர்வாகச்சிறப்பிலிருந்தல்ல.
என்னுடையது எனும் எண்ணம் இருந்தால்தான் ஒரு பொருளை பாதுகாக்கும் எண்ணம் வரும். அதுவே பொதுச்சொத்தாக இருந்தால் அலட்சியமும், அழிப்பதும் பெருகத்தான் செய்யும் இது இயல்பு என்பவர்களும் இருக்கிறார்கள். ஆம் இது இயல்புதான். யாருக்கான இயல்பு? தன்னுடைய உரிமையில்லாத எதையும் தான் அடையத்துடிக்கும், அதையே தனிமனித உரிமையாக, முன்னேற்றமாக கூறித்திரியும் முதலாளித்துவ வக்கிரம் பிடித்தவர்களின் இயல்பு. ஒரு (கிராமத்து) மனிதன் தனக்கு எந்தவித லாபமும் இல்லையென்றாலும் சின்னஞ்சிறு செடி அழியும் நிலை ஏற்பட்டால் அதை காக்க முனைவான். ஆனால் வேறொரு (நகரத்து) மனிதனோ வளர்ந்த பெரிய மரமானாலும் தனக்கு லாபம் கிடைத்தால் வெட்டி விற்கத்தயங்க மாட்டான். இந்த இருவரின் செயல்பாடுகளின் பேதம் எதை அடிப்படையாகக் கொண்டது? பொதுச்சொத்தை தனதாக்கிக் கொள்ளும் வெறியையல்லவா அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பொதுச்சொத்துகள் யாரால் அழிகின்றன? ஆக்சிஜன் தொழிற்சாலைகளாக இருந்த உலகின் காடுகளை அழித்தது யார்? வற்றாத ஆறுகளை வரளச்செய்தது யார்? நிலத்தடி நீரை தனது சொந்த லாபத்திற்காக உறிஞ்சிக்குடித்து மக்களை குடிநீருக்காக அலைய வைத்திருப்பது யார்? காற்றை மாசுபடுத்தியது யார்? மக்கள் வாழ்வை நாசப்படுத்தியது யார்? உலகில் பொதுச்சொத்து என்று எதுவுமே இருக்கக் கூடாது எல்லாம் தனதாக இருக்கவேண்டும் என்பதினால் தான் இத்தகைய கோரங்கள். ஆக மக்கள் இயல்பு என்று இவர்கள் கூறுவது தங்களுடைய இயல்பைத்தான். யார் இதுவரை பொதுச்சொத்தை வரைமுறையின்றி அழித்து நாசம் செய்தார்களோ அவர்கள் தான் இப்போது தனியார்மயப் படுத்துவதன் மூலம்தான் பொதுச்சொத்தை காக்கமுடியும் என்பவர்கள். இவர்களின் நோக்கம் காப்பதல்ல, தன்னுடையதாக்கிக் கொள்வது.
தன்னுடைய உழைப்பின் பலன் முழுமையாக தனக்கு கிடைக்கும் என்றால்தான் ஒரு மனிதன் தன்னுடைய ஈடுபாட்டுடன் கூடிய முழுமையான உழைப்பை அதில் செலுத்துவான் என்பது இவர்களுடைய வேதவசனங்களில் ஒன்று. இதைச்சொல்லுவது யார்? உழைக்கும் தொழிலாளிகளின் உழைப்பை யார் ஓட்டச்சுரண்டி தன்னை வளப்படுத்திக் கொள்கிறார்களோ, அவர்கள் தான். இன்றைய தொழிலாளர்கள் காலம் மறந்து தினமும் உண்ணும் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் உழைத்துக் களைப்பது தன் உழைப்பின் பலன் முழுமையாக தனக்கு கிடைக்கிறது எனும் திருப்தியினால் அல்ல. எவ்வளவு உழைத்தாலும் தாங்கள் சுரண்டப் படுவதை அறியாமல் அவர்களை பசியே ஆண்டுகொண்டிருக்கிறது என்பதால். முதலாளித்துவம் மக்களை தின்று கொண்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் உழைப்பை மறக்கவில்லை. ஆனால் கம்யூனிசம் வந்தால் உழைப்பை மறந்து விடுவார்கள், ஆர்வம் குன்றிவிடும் என்கிறார்கள். இதைத்தான் சாத்தான் வேதம் ஓதுதல் என்பார்களோ.
மக்கள் கம்யூனிசத்தை புரிந்து அதை ஏற்றுக்கொண்டு கம்யூனிஸ்டுகளாக மாறுவதும் அதன்பின்னர் புரட்சியும் சாத்தியமில்லாத ஒன்று என்பது சத்தியமில்லாத கூற்று. புரட்சிக்கு அனைவரும் கம்யூனிஸ்டுகளாக மாறவேண்டிய அவசியமில்லை என்பதுடன், முதலாளித்துவம் மக்களை கம்யூனிசத்தை நோக்கி விரட்டுகிறது என்பதுதான் சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனவே கம்யூனிசம் வெல்லும்……..நிச்சயம்.

author avatar
Castro Murugan

Leave a Comment