பெனசிர் புட்டோ கொலையில் தேடப்படும் குற்றவாளி முஷாரப்

பெனசிர் புட்டோ கொலையில் தேடப்படும் குற்றவாளி முஷாரப்

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப், 74, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அண்டை நாடான பாகிஸ்தானில் இரண்டு முறை பிரதமராக இருந்தவர் ,பெனசிர் புட்டோ. கடந்த, 2007, டிச., 27ல் ராவல்பிண்டி லியாகத் பாக் பகுதியில், தேர்தல் பிரசாரம் செய்தபோது, வெடி குண்டு தாக்குதலில், அவர் கொல்லப்பட்டார்.இந்த கொலை வழக்கு, இஸ்லாமாபாத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. கடந்த, 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:முன்னாள் பிரதமர் கொலை வழக்கில், காவல்துறை உயரதிகாரிகள், சவுத் அஜிஸ், குராம் ஷாசாத் ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, தலா, 17 ஆண்டு சிறை தண்டனையும், தலா, ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.முன்னாள் அதிபர் முஷாரப், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார். அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற, ஐந்து பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *