மும்பை : பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் என்றும், அவரது செயல்பாடுகள் சுவாமி விவேகானந்தரை ஒத்து இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மும்பை வந்த அமித் ஷா, மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.அந்த புத்தக வெளியீட்டு விழாவில் அமித் ஷா பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக திகழ்ந்து வருகிறார். மோடியின் தலைமைக்கு, பல்வேறு நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. மோடி, இந்திய நாட்டிற்கு மட்டுமல்லாது, 125 கோடி மக்களின் பெருமையாக திகழ்கிறார்.கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தின் போது நாட்டின் கொள்கைகள் பாழ்பட்டு கிடந்தன. அவற்றை, பிரதமர் மோடி, தனது கடின உழைப்பு, திறன்மிகுந்த நிர்வாகம் உள்ளிட்ட நேர்மறை காரணிகளின் மூலம் சீர்செய்து, நாட்டை முன்னேற்றப்பாதையில் வழிநடத்தி் சென்றுகொண்டுள்ளார் என்று அமித் ஷா கூறினார்.அத்வானி தலைமை தேவையில்லை : கட்சியின் முக்கிய தூண் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால், இன்றைய நிலையில், அவரால் கட்சியை தற்போதைய நிலையில் திறம்பட நடத்த முடியாது. இதன்காரணமாகவே, கட்சியின் வளர்ச்சிக்கு இளரத்தம் பாய்ச்சும் முயற்சியில், கட்சியின் தலைமை, அமித் ஷா போன்ற திறமை மிக்கவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் காட்சே கருத்து தெரிவித்துள்ளார்.