மக்களுக்காகவே மத்திய அரசுடன் இணக்கம்; முதல்வர் பழனிசாமியின் விளக்கம்….!

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகத்தான் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதாக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கருப்பூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, அரசின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசினார்.
அரசின் மீது களங்கம் கற்பித்து ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்பதற்காக இல்லாத விஷயத்தை தேடி கண்டுபிடித்து குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றனர். அரசை விமர்சிப்பதற்கு எந்த வகையிலும் வாய்ப்பு இல்லாத நிலையில், ஏதாவது ஒன்றை தேடி எடுத்து, தவறாக விமர்சித்து வருகின்றனர்.
அரசை குறைகூறும் எதிர்க்கட்சிகள்(குறிப்பாக திமுக) அவர்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.
மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்காகவும் மாநிலத்திற்குத் தேவையான நிதியை மத்திய அரசிடமிருந்து சுமூகமான முறையில் பெறவுமே மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செயல்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தபோது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், அவர்களுடன் இணக்கமாக செயல்பட்டதை சுட்டிக்காட்டி முதல்வர் பேசினார்.
மக்கள் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோமே தவிர திமுகவைப் போல பதவிக்காக மட்டும் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கவில்லை. திமுக வேண்டுமானால் கடந்த காலத்தை மறந்துவிடலாம். ஆனால் மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment