Uncategory
மனைவியுடன் வலுக்கட்டாய தாம்பத்ய உறவு பலாத்காரம் அல்ல- சுப்ரீம் கோர்ட்
டெல்லி: இந்திய தண்டனை சட்டத்தின் 375-வது பிரிவில், 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் வலுக்கட்டாயமாக தாம்பத்ய உறவு கொள்வது பலாத்கார குற்றம் அல்ல என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பிரிவு, அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று அறிவிக்கக்கோரி, ஒரு தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்களின் விருப்பத்துக்கு மாறாக, அவர்களுடன் கணவர்கள் வலுக்கட்டாயமாக தாம்பத்ய உறவு கொள்வதை பலாத்கார குற்றம் ஆக்கலாமா என்பது பற்றி நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதித்தது. இறுதியில், அது பலாத்கார குற்றம் அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளது. ஆகவே, அது கிரிமினல் குற்றம் அல்ல என்று கூறினர்.
மேலும், 18 வயதுக்கு குறைவான இளம்பெண்கள், தங்கள் காதலருடன் பரஸ்பர சம்மதத்துடன் உறவு வைத்துக்கொண்டாலும், அந்த ஆண் மீது பலாத்கார வழக்கு தொடர்ந்து, 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பது மிகவும் கடுமையானது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்தியாவில் குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 இன் படி மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல் உள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்.
18 வயது நிரம்பாத பெண்ணை திருமணம் செய்யும் ஆணுக்கு அதிகப்பட்சமாக 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போரும், திருமணத்தில் பங்கு கொண்டாலோ அல்லது ஆதரித்தாலோ அவர்களும் தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள். இக்குற்றம் ஜாமீனில் விடுவிக்க இயலாத குற்றம் ஆகும்.
எனினும் இந்தியாவில் 23 மில்லியன் மைனர் மணமகள்கள் இருக்கின்றனர். அவர்களின் கணவர்கள் தங்களின் மனைவியர்களுடன் பெரும்பாலும் வலுக்கட்டாய உறவில் ஈடுபடுகின்றனர். இது தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளர்.
