கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ், ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்தினர். இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் 26ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு பயிற்சி பெறும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவனுடன் இந்திய அணி 2 நாள் போட்டியில் மோதுகிறது. கொழும்பு கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், எஸ்எல்பி லெவன் 55.5 ஓவரில் 187 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.
குணதிலகா 74 ரன் (97 பந்து, 11 பவுண்டரி), திரிமன்னே 59 ரன் (125 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இந்திய பந்துவீச்சில் குல்தீப் 4, ஜடேஜா 3, முகமது ஷமி 2 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்துள்ளது (30 ஓவர்). கே.எல்.ராகுல் 54, முகுந்த் 0, புஜாரா 12 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கோஹ்லி 34, ரகானே 30 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.