பலாத்கார வழக்கு: சாமியார் ராம் ரஹீமுக்கான தண்டனை நாளை அறிவிப்பு- ஹரியானாவில் துணை ராணுவம் குவிப்பு!

சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியான சாமியார் ராம் ரஹீம் சிங்குக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து ஹரியானாவில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பலாத்கார வழக்கில் தேரா சச்ச சவுதா அமைப்பின் நிறுவனரான ராம் ரஹீம் சிங் குற்றவாளி என ஹரியானாவின் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இதையடுத்து ராம் ரஹீம் சிங் ஆதரவு குண்டர்கள் வன்முறை வெறியாட்டம் போட்டனர்.
இந்த வன்முறையில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் பலியாகினர். 250க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
552 பேர் கைது
இந்த கலவரத்தை கட்டுப்படுத்தாமல் ஹரியானா பாஜக அரசு வேடிக்கை பார்த்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 552 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தண்டனை விவரம்
இந்நிலையில் ராம் ரஹீம் சிங்குக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. ராம் ரஹீம் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐ வாதிட உள்ளது.

மீண்டும் வன்முறை?
பலாத்கார வழக்கில் குறைந்தபட்சம் 7 அல்லது 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் ராம் ரஹீம்சிங் ஆதரவு குண்டர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

துணை ராணுவம் குவிப்பு
இதைத் தடுக்கும் வகையில் ஹரியானா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 101 துணை ராணுவ கம்பெனிகள் குவிக்கப்பட்டுள்ளன.

author avatar
Castro Murugan

Leave a Comment