திவால் வழக்குகளுக்கு நிவாரணம் கிடைக்க இனி நீதிமன்றங்களை நாடலாம் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை திவால் வழக்குகளுக்கு நிவாரணம் கிடைக்க கடன் மீட்பு தீர்ப்பாயங்களை (டிஆர்டி) மட்டுமே நாட வேண்டிய சூழல் இருந்தது. சமீபத்தில் திவால் மசோதா அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால் இனி சம்பந்தப்பட்ட ஆணையங்களையோ அல்லது நீதிமன்றங்களையோ நாடி இதற்கு உரிய நிவாரணம் பெறலாம் என நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
1909-ம் வருடத்திய திவால் மசோதா சட்டம் மற்றும் 1920-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திவால் மசோதா சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக 2016-ம் ஆண்டு திவால் மசோதா கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக பல உயர்நீதிமன்றங்களில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனி நபர் திவால் நடவடிக்கை தொடர்பான வழக்குகளும் இப்புதிய சட்டத்தின்கீழ் வரும். இதன்படி பிரிவு 243-ன்படி இதுவரையில் அறிவிக்கையாக சுட்டிக் காட்டப்படாத தனிநபர்கள் மற்றும் கூட்டாளி நிறுவனங்களும் இப்பிரிவின்கீழ் வரும். இது தொடர்பான 3-ம் பிரிவு அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.