இன்றைய வேட்பாளர்:தூத்துக்குடி தொகுதியின் பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தராஜன்

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல்  நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.

அதில் மாநிலத்தை ஆளும் அதிமுக, மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பாஜக, பாமக, தேமுதிக இன்னும் சில கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. அதேபோல திமுகவும், தேசிய கட்சி காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் என கூட்டணி அமைத்துள்ளது. இதில் பிரதான கட்சிகள் வேகவேகமாக தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளராக மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகள் மு,க.கனிமொழி தேர்தலில் நிற்க உள்ளார் என்று  அறிவிப்பு வெளியானது. அதனை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல இவரை எதிர்த்து நிற்க அதிமுக கூட்டணி கட்சியான பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் நிற்க உள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

பாஜக சார்பில் போட்டியிடும் டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் பற்றிய சில குறிப்புகள் உங்கள் பார்வைக்கு :

Related image

இவர் பிறந்த ஊர் நாகர்கோயில். இவரது கணவர் பெயர் டாக்டர்.P. சௌந்தராஜன். இவருடைய தந்தை குமாரி ஆனந்தன். இவர் 1977இல் ஜனதா தளம் சார்பாக நாகர்கோயில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிறகு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து 1980இல் திருவெற்றியூர் தொகுதியிலும், 1984இல் ராதாபுரம் தொகுதியிலும், 1989இல் சாத்தான்குளம் தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார். குடும்பம் காங்கிரஸ் குடும்பம் என்றாலும் பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார்.

தமிழிசை சௌந்தராஜன் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கையிலேயே திருமணம் முடிந்தது. அது இந்திய தேசிய காங்கிரஸ் தமிழக தலைவர் குமரி ஆனந்தனின் மகள் திருமணம் என்பதால் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜிஆரும், கருணாநிதியும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர். பேசிய கருணாநிதி, ‘தமிழிசைக்காக நாங்கள் போராடி கொண்டிருந்த காலத்திலேயே, தனது குழந்தைக்கு தமிழிசை என பெயர் வைத்தவர் குமரி அனந்தன் என பெருமையாக பேசினார்.

Related image
பிறகு பேசிய எம்.ஜி.ஆர், ‘தமிழிசை செல்லும் பாதைக்கும் வழிகாட்டியாகவும், வழித்துணையாகவும் சௌந்தர்ராஜன் இருக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தின் இரு துருவங்கள் ஒரே மேடையில் தோன்றியதால் அப்போதைய பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக மாறியிருந்தது தமிழிசை திருமணம்.

இவர் படித்தது மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியிலும், மேற்படிப்பை Dr.எம்.ஜி.ஆர் மெடிக்கல் யுனிவெர்சிட்டியில் படித்துள்ளார். பிறகு சென்னையில் உள்ள ராமச்சந்திரா மெடிக்கல் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.

அரசியல் பயணங்கள் :

தமிழிசை அரசியலில் இறங்க முதல் முட்டுக்கட்டையாக இருந்தது அவரது தந்தை குமரி அனந்தன் தான். கரணம், வாரிசு அரசியலை சுட்டி காட்டி அவரை அரசியலில் நுழைய தடை விதித்திருந்தார் அவரது தந்தை. இருந்தும், 1996ஆம் ஆண்டு நாகர்கோயில் நாடாளுமன்ற தேர்தலில் தனது தந்தை காங்கிரஸ் சார்பாக நிற்க அவருக்கு எதிராக பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்னன் போட்டியில் இருந்தார். இதில் தனது தந்தைக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பாக பேச்சாளராக இருந்து வாக்கு சேகரித்தார் தமிழிசை!
அப்போது பாஜக தொண்டர்கள் வேலை செய்யும் விதம் மிகவும் பிடித்து விட்டதாம். மேலும் அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் செயல்பாடுகளும் பிடித்து விட்டதாம். பிறகு ஒரு சமயத்தில் தனது நோயாளி ஒருவருக்கு குறிப்பிட்ட வகை ரத்தம் கிடைக்க திணறியபோது ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் தான் ரத்தம் கிடைக்க வழிவகை செய்தனராம். இக்காரணங்களால் தமிழிசை, பாஜகவில் உடனே தன்னை இணைத்து கொண்டார். இது அவரது தந்தைக்கு பிடிக்காமல் போக சுமார் 7 மாதம் தனது மகளிடம் பேசாமல் இருந்துள்ளார் குமரி அனந்தன்.

2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனது அப்பா காங்கிரஸ் சார்பில் ஜெயித்த ராதாபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வி அடைந்தார். பிறகு 2011ஆம் ஆண்டு வடசேரி தொகுதியில் போட்டியிட்டு 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை தழுவினார்.
இதனிடையே 2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் வடசென்னை தொகுதியில் நின்று 23,350 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment