“வதந்திகளை பரப்பும் பாஜக ஐடி செல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”- மம்தா பானர்ஜி ஆவேசம்!

வதந்திகளை பரப்பும் பாஜக ஐடி செல் உறுப்பினர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாய அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறும் எதிர்க்கட்சி உட்பட பலரும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்தவகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டிருந்தார். மேலும், பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி, கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை ஒரு போராட்ட குழு சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதன்காரணமாக டெல்லி காவல்துறையினர், பெங்களூரில் இருந்த திஷா கைது செய்தனர். அவர் மீது தேசத் துரோகம், வன்முறையை தூண்டி விடுவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து டெல்லி போலீசார் பெங்களூரில் வைத்து திஷா ரவியை கைது செய்த நிலையில், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். திஷா ரவியை கைது செய்ததற்கு பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசாங்க கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோர்களை கைது செய்வது, ஏற்கத்தக்கதில்லை. போலி செய்திகளை பரப்பும் பாஜக ஐடி செல் உறுப்பினர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் இரண்டு விதிமுறைகள்?” என ஆவேசமாக பேசியுள்ளார்.