15 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் மலர்ந்த தாமரை…!

கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக எம்.எல்.ஏக்கள் 15 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக சட்ட சபைக்குச் செல்கின்றனர்.

நாட்டின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்தாலும் தமிழ்நாடு,கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை.

இந்த நிலையில்,கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது மே 2 ஆம் தேதி நடைபெற்றது,அதன்படி அதிமுக கூட்டணி சார்பாக 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக நாகர்கோவில், திருநெல்வேலி,கோவை தெற்கு மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

  • கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளார் வானதி சீனிவாசன் 52,526 வாக்குகள் பெற்றார்,மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் 51,087 வாக்குகள் பெற்றார்.இதனால்,வானதி சீனிவாசன் 1,439 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மநீம கட்சி தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்துள்ளார்.
  • நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி,திமுக வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜனை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
  • திருநெல்வேலியில் போட்டியிட்ட பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்,திமுக வேட்பாளர் எ.எல்.எஸ்.லட்சுமணனை தோற்கடித்துள்ளார்.
  • மேலும்,மொடக்குறிச்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளார் சரஸ்வதி வெற்றி பெற்று திமுக வேட்பாளர் சுப்புலக்ஷ்மியை தோற்கடித்துள்ளார்.

இதனால்,பாஜக எம்.எல்.ஏக்கள் 15 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

இதற்கு முன்னர்,2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்,திமுக கூட்டணி சார்பாக 21 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக காரைக்குடி, மயிலாப்பூர்,தளி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 இடங்களில் வெற்றி பெற்றது.ஆனால்,அதன் பின்னர் நடைபெற்ற 2006,2011 மற்றும் 2016 ஆகிய மூன்று தேர்தல்களில் பாஜகவுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.