வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல் ! இந்தியாவில் 9 மாநிலங்களில் பாதிப்பு உறுதி

டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. டெல்லி, சண்டிகர் மற்றும் மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை என்றும், இந்த இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தேர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.நோய் மேலும் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.இறந்த காகங்கள் மற்றும் வாத்துகளிலிருந்து எட்டு மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டன.அனைத்து மாதிரிகளிலும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது என்று சோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கால்நடை பராமரிப்புத் துறையின் ஆலோசனையின்படி தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு முன்னதாக, மகாராஷ்டிராவும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் கடந்த சில நாட்களில் சுமார் 900 கோழிகள் இறந்த நிலையில்,சோதனையில் பறவைக் காய்ச்சல் இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது.  கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்கனவே  7 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்லி ,மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்த்து 9 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.