அருமை…BHOG தரச்சான்று பெற்ற 314 திருக்கோயில்கள் – சான்றிதழ் வழங்கி பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை:தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள்,இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச் சான்றிதழ்கள் பெற்றததற்காக,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருக்கோயில் செயல் அலுவலர்களை பாராட்டி,தரச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தியுள்ளார்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 754 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இவற்றில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,ஸ்ரீரங்கம் – அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி,ஆண்டுக்கு ரூ.76 கோடி செலவில் 754 திருக்கோயில்களில் நாள் ஒன்றுக்கு 70,000 பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

அதே வேளையில்,இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுபாட்டு நிறுவனம்,நாடு முழுவதும் உணவு தயாரித்து வழங்கிடும் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை பரிசோதித்து தரச்சான்றிதழ் வழங்கும் பணியினை செய்து வருகிறது. இந்நிறுவனம் மத வழிபாட்டு தலங்களில் தயாரிக்கப்பட்டு இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாத வகைகளை பரிசோதித்து கடவுளுக்கு சுத்தமான சுகாதாரமான பிரசாதம் படைத்தல் (BHOG-Blissful Hygienic Offering to God) சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

இதற்கிடையில்,திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதான உணவு வகைகள் பரிசோதனைக்குட்படுத்தி இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தரச்சான்றிதழ்கள் 6 திருக்கோயில்களுக்கு மட்டுமே பெறப்பட்ட நிலையில்,தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர்,அரசின் சீரிய முயற்சியால் 308 திருக்கோயில்களுக்கு தரச்சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. மேலும்,440 திருக்கோயில்களுக்கு சான்றிதழ்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்,இந்தியா முழுவதும் 394 மத வழிபாட்டு தலங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் திருக்கோயில்களுக்கு இச்சான்றிதழ் பெறப்பட்டு தமிழ்நாடு முதன்மை 314 மாநிலமாக திகழ்கிறது. இதன் மூலம் திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் சுத்தமாகவும்,சுகாதார முறையிலும் தயாரித்து வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது.

தஇந்நிலையில்,மிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள்,இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தாச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.1.2022) தலைமைச் செயலகத்தில்,திருக்கோயில்களின் செயல் அலுவலர்களை பாராட்டும் விதமாக,தரச்சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியுள்ளார்.

அதன்படி,மயிலாப்பூர்-அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,திருவேற்காடு – அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்,திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,திருவண்ணாமலை – அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்,சென்னை, தங்கசாலை – அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,திருமுல்லைவாயில் அருள்மிகு – மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்,திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில்,மகாபலிபுரம் – அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், சென்னை – அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்,சென்னை – அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களின் இணை ஆணையர் மற்றும்செயல் அலுவலர்களை பாராட்டி,தரச்சான்றிதழ்கள் வழங்கி. வாழ்த்தியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் .மா. சுப்பிரமணியன்,இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு உள்ளிட்டோர்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.