கோவாக்சின் மருந்து தயாரிக்கும் பார்முலாவை பிற நிறுவனங்களுக்கு வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்புதல்..!

கோவாக்சின் மருந்து தயாரிக்கும் பார்முலாவை பிற நிறுவனங்களுக்கு வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே,கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்காக,கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கோவாக்சின் மருந்தினை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும்,கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தினை சீரம் நிறுவனமும் தயாரித்து வருகின்றன.

ஆனால்,கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது,மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில்,தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால்,ஏராளமானோர் தடுப்பூசி போட முடியாத சூழலில் உள்ளனர்.

இந்நிலையில்,பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் மருந்தின் உற்பத்தியை பல மடங்கு அதிகரிப்பதற்காக,மருந்து தயாரிக்கும் பார்முலாவை பிற நிறுவனங்களுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது,என்று என்ஐடிஐ அயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பவுல் நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து டாக்டர் பவுல் கூறியதாவது,”கோவாக்சின் தயாரிப்பு பார்முலாவை மற்ற நிறுவனங்களுக்கும் பகிர வேண்டும் என்று மக்கள் எங்களிடம் கேட்டுள்ளனர்.அதனால்,கோவாக்சின் உற்பத்தி நிறுவனம் [பாரத் பயோடெக்],நாங்கள் அவர்களுடன் விவாதித்து எடுத்த முடிவை வரவேற்றுள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.இந்த தடுப்பூசியின் கீழ் வைரஸ் செயலிழக்கப்படுகிறது.இது பி.எஸ்.எல் 3 ஆய்வகங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

எனினும்,அனைத்து நிறுவனத்திற்கும் இந்த பார்முலா கொடுக்கப்படமாட்டாது.இந்த தடுப்பூசி மருந்தினை தயாரிக்க விரும்பும் நிறுவனங்களுக்கு மட்டுமே நாங்கள் பார்முலாவை கொடுக்க உள்ளோம்”,என்று கூறினார்.