திமுகவின் உறுப்பினர் என்பதே எல்லாவற்றையும்விட மதிப்பிற்குரிய பொறுப்பு – மு.க. ஸ்டாலின்

திமுகவின் உறுப்பினர் என்பதே எல்லாவற்றையும்விட மதிப்பிற்குரிய பொறுப்பு – மு.க. ஸ்டாலின்

எந்தப் பொறுப்பில் இருந்தாலும், திமுகவின் உறுப்பினர் என்பதே எல்லாவற்றையும்விட மதிப்பிற்குரிய பொறுப்பு என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய  கடிதத்தில் ,திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பான வரலாற்றில் ஒரு பொருள் செறிந்த நாளாக மாறியிருக்கிறது செப்டம்பர் 9. கழகத் தோழர்களுக்கு செப்டம்பர் மாதம் எப்போதுமே களிப்புமும் ஊக்கமும் தரும் மாதம்தான்.செப்டம்பர் 15 – பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள். செப்டம்பர் 17 – ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் பிறந்தநாள். அதே நாள்தான், நம் கழகமும் பிறந்தநாள்.
எனவே, முப்பெரும் விழாவாக அதனை நாம் கொண்டாடி மகிழ்வது வழக்கம். திருவிழாவுக்கு முன் பந்தற்கால் நடுவது போல, இந்த முப்பெரும் விழாவுக்கு முன்பாக, நேற்றைய செப்டம்பர் 9 சிறப்பான நாளாக அமைந்துவிட்டது.இந்திய அரசியலைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதுமே உண்டு என்பதைப் பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் பல முறை நிரூபித்திருக்கிறார்கள். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்போதும், உங்களின் உழைப்பாலும் – தமிழக மக்களின் பேராதரவாலும், தி.மு.கழகத்தை இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்த்து வியப்படைந்தது. நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக, தி.மு.கழகம் தன் வலிமையைக் காட்டியது. இப்போது, கொரோனா காலத்தில் அரசியல் பணிகள் பலவும் முடங்கியுள்ள நிலையில், பொதுக்கூட்டங்கள் – பேரணிகள் – மாநாடுகள் இவற்றிற்கு அனுமதி இல்லாத சூழலில், 3500-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தைக் காணொலி வாயிலாக நடத்துவதென்பது சாத்தியமாகுமா என்கிற சந்தேகம் அனைத்துத் தரப்பிலும் இருந்தது.
கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகளாகவும், ஆச்சரியக்குறிகளைக் கேள்விக்குறிகளாகவும் மாற்றுகின்ற வலிமை, எளிய மக்களின் இனிய இயக்கமான தி.மு.கழகத்திற்கு உண்டு என்பதை, கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து நிரூபித்து வருகிறோம். காணொலி வாயிலான பொதுக்குழுவும் அப்படிப்பட்டதுதான்.தொழில்நுட்பத் தடங்கலின்றி – நேர்த்தியாக – ஒவ்வொருவரின் கருத்துகளும் தெளிவாகக் கேட்கும் வகையில் வெற்றிகரமாக இதனை நடத்திக் கொடுத்து, இந்திய அரசியலில் புதிய தடம் பதிக்கச் செய்து இதுவரை யாரும் கண்டிராத புதுமையைச் சாத்தியப்படுத்திய அத்தனைப் பேருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திண்ணையில் தொடங்கிய பொதுக்குழு, உலகம் வியக்கும் வகையில் திட்பம் வாய்ந்த இணைய வழியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் இந்தப் பொதுக்குழுவின் முக்கியத்துவம் என்பது, கழகத்தின் புதிய பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு என்பதாகும்.எந்தப் பொறுப்பில் இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் என்பதே எல்லாவற்றையும்விட மதிப்பிற்குரிய பொறுப்பு. தொண்டர்களே இந்த இயக்கத்தின் அடிப்படை வலிமை. அதனை உணர்த்தும் வகையில் கழகத்தின் முன்னாள் பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி அவர்கள் தொடங்கிப் பல முன்னோடிகளும் வாழ்த்துரை வழங்கினார்கள். நாம் கூடிக் கலையும் சாதாரணக் கூட்டமல்ல; கூடிப் பொழியும் மழை மேகம்.
கழகப் பொதுக்குழுவும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாத்திடும் தீர்மானங்களைப் பொழிந்திருக்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில் தன்னலம் மறந்து பணியாற்றியோருக்கான பாராட்டு – ‘ஒன்றிணைவோம் வா’ எனும் மகத்தான செயல்பாடு, தலைவர் கலைஞர் வழங்கிய அருந்ததியருக்கான 3% உள்ஒதுக்கீட்டுக்கும் – மருத்துவக் கல்வி, முதுநிலை மருத்துவக் கல்வியில் கழகம் நிலைநாட்டிய சமூகநீதி, அபாயகரமான தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, குடிமைப் பணிகள் தேர்வில் கடைப்பிடிக்கப்படும் சமூக அநீதி, சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையைக் கைவிட வலியுறுத்தல், ஊழல் அ.தி.மு.க. அரசைப் பாதுகாக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டு பலிகளுக்கு நீதி, கொரோனா பேரிடர் காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலம், மத்திய – மாநில அரசுகளின் விவசாயிகள் விரோதக் கொள்கைக்கு எதிர்ப்பு, மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி – கழகத்தை அரியணை ஏற்ற சூளுரை உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தத் தீர்மானங்களில் நாடாளுமன்றம் – சட்டமன்றம் ஆகியவற்றில் குரல் கொடுப்பதன் வழி தீர்வு காணக்கூடியவை இருக்கின்றன. நீதிமன்றங்கள் வழியே சட்டப்போராட்டம் நடத்தி தீர்வு காணக்கூடியவை உண்டு. எல்லாவற்றுக்கும் மேலானது மக்கள் மன்றம். ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களின் பேராதரவைத் தொடர்ந்து பெற்றுவரும் திராவிட முன்னேற்றக் கழகம், எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அரியணை ஏறும் நாளில் தமிழ்நாட்டைப் பீடித்துள்ள இருள் விலகும். உதயசூரியக் கதிர்கள் ஒளி வீசும். அதற்கான வெற்றிப்பாதையைத் திட்டமிட்டு அமைத்து, நாளைய வெற்றிக்குக் கட்டியம் கூறிடும் வகையில் காணொலி வாயிலாக மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது பொதுக்குழுக் கூட்டம்.
உங்களில் ஒருவனாக இந்தத் தீர்மானங்களை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவற்றை நிறைவேற்றிடும் வகையில் உங்கள் உழைப்பைத் தாருங்கள். ஒருங்கிணைந்து செயலாற்றுங்கள். கழகத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டு வெறும் வாயை மெல்லுகின்றவர்களுக்கு, அவல் அள்ளிப் போடும் செயல்களைத் தவிர்த்து, மக்களிடம் சென்று களப்பணிகளை மேற்கொள்ளுங்கள்.
அடுத்து அமையவிருப்பது தி.மு.கழக அரசுதான் என்ற மக்கள் மனதில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள தீர்ப்பை, வாக்குப்பதிவு நாளில் உறுதிப்படுத்தும் வகையில் பணியாற்றிட சூளுரைத்துக் களம் காணுங்கள். 7 மாதங்களில் கழக ஆட்சி எனும் இலக்கை அடைந்து, அதனை நம் உயிர்நிகர் தலைவரின் ஓய்விடத்தில் காணிக்கை ஆக்குகின்ற வெற்றித் திருநாள் வரை நமக்கு ஓய்வில்லை.இவ்வாறு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Join our channel google news Youtube