பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மனைவி ராப்ரி தேவி ஆகியோருக்கு ஜாமீன்!

நில மோசடி வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு.

நில மோசடி வழக்கு:

நில மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மனைவி ராப்ரி தேவி மற்றும் அவர்களது மகள் மிசா பார்தி உள்ளிட்டோருக்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பலரிடமும் நிலம் பெற்றுக்கொண்டு ரயில்வேயில் பணி வழங்கியதாக கூறப்படும் சிபிஐ வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி உள்ளிட்டோர் இன்று  நீதிமன்றத்தில் ஆஜரானர்.

வழக்கு பதிவு:

இதுபோன்று, லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதியும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். லாலு பிரசாத் யாதவ் மத்திய அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலரிடமும் நிலம் பெற்றுக்கொண்டு ரயில்வேயில் பணி வழங்கியதாக லாலு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிபிஐ வழக்கில் ஜாமீன்:

இந்த நிலையில், சிபிஐ வழக்கில் லாலு பிரசாத் யாதவ், மனைவி ராப்ரி தேவி மற்றும் அவர்களது மகள் மிசா பார்தி உள்ளிட்டோருக்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி, இந்த வழக்கு அடுத்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்யாமல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததைக் குறிப்பிட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ரூ.50,000 சொந்த ஜாமீன் மற்றும் அதற்கு இணையான தொகையை ஜாமீனாக வழங்க உத்தரவிட்டது.

நீதிமன்றம் சம்மன்:

நில மோசடி வழக்கில் லாலு யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) எம்பி மிசா பாரதி ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, மிசா பார்தி மற்றும் 13 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சிபிஐ குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அமலாக்கத்துறை சோதனை:

சம்மனை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜரான லாலு யாதவ் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. லாலு யாதவின் குடும்பத்தைச் சேர்ந்த பலரை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் பல சோதனைகளை நடத்தியது. டெல்லியில் உள்ள பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் அமலாக்க இயக்குனரகக் குழு மார்ச் 10ம் தேதி 11 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தியது.

சிபிஐ சம்மன்:

மார்ச் 10 அன்று, ரயில்வே நிலம் மோசடி தொடர்பாக டெல்லி என்சிஆர், பாட்னா, மும்பை மற்றும் ராஞ்சியில் பல்வேறு இடங்களில் 24 இடங்களில் ED சோதனை நடத்தியது. இதனிடையே, வேலைக்கான நிலம் தொடர்பான வழக்கு தொடர்பாக பீகாரின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது, இருப்பினும், தேஜஸ்வி தனது மனைவியின் உடல்நலக்குறைவு காரணமாக விசாரணை நிறுவனம் முன் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment