தவறான கருத்து…!மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்…!

அலோபதி மருத்துவ முறை குறித்து தவறான கருத்து தெரிவித்ததால், பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனத்தின் உரிமையாளரான பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து நோயாளிகளை குணப்படுத்த ஆங்கில மருத்துவம்,சித்தா உள்ளிட்ட சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில்,பாபா ராம்தேவ் சமீபத்தில் அலோபதி மருத்துவம் குறித்து காணொளி ஒன்றில் தவறாக பேசியுள்ளார்.

அதில்,பாபா ராம்தேவ் கூறியிருப்பதாவது,”அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான அறிவியல்,அதனால்,இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர்.மேலும்,அலோபதி மருத்துவ முறை ஒரு காலாவதியானது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கம்,பாபா ராம்தேவ்,தான் கூறிய கருத்தை,திரும்பப் பெற வேண்டும் என்றும் அதற்காக எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் அதில்,இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 14 நாட்களுக்குள் பாபா ராம்தேவ் தனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், சிவில் மற்றும் குற்றவியல் ரீதியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்”,என்றும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து,மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், தனது ட்விட்டர் பக்கத்தில்,”கொரோனாவுக்கு எதிராக போராடி மக்களை காக்கும் போராளிகளை அவமதிக்கும் வகையில் பாபா ராம்தேவ் பேசியுள்ளார்.எனவே,அவர்தமது கருத்தை திரும்பப் பெற வேண்டும்”,என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில்,பாபா ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனின் கடிதம் கிடைக்கப் பெற்றேன்.எனவே,அலோபதி மருத்துவம் தொடர்பான என்னுடைய கருத்துகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். மேலும்,அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்”,எனக் கூறியுள்ளார்.