அயோத்தி வழக்கு !அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு

அயோத்தி வழக்கின் விசாரணையை அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.நாடு முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முன்பிருந்தே, அங்குள்ள 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது.

அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள, 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு,அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணையில் சமரசமான தீர்வு காணவேண்டும் என்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 நபர்கள் கொண்ட சமரசக்குழுவை  அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

பின்  அயோத்தி நில விவகாரம் தொடர்பாக  சமரசக்குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது .அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண இயலவில்லை என்று  உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இதன் பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ,அயோத்தி ராமர் கோவில் வழக்கு இறுதி விசாரணை ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கப்படும் . நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்றும்  அறிவித்தார்.இதனையடுத்து  ஆகஸ்ட் 6-ஆம் தேதி  உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அமர்வில் அயோத்தி வழக்கின் விசாரணை தொடங்கியது.

தொடர்ந்து வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் அயோத்தி வழக்கின் விசாரணையை அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகின்ற நவம்பர் மாதத்துடன் ஓய்வுபெற உள்ள நிலையில் அயோத்தி வழக்கின் விசாரணையை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.