மக்களை அச்சுறுத்தாமல் விழிப்புணர்வு கொடுங்கள் – ஊடகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

மக்களை அச்சுறுத்தாமல் விழிப்புணர்வு கொடுங்கள் – ஊடகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம், எனவே மக்களை அச்சுறுத்தாமல் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என ஊடகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிக அளவில் காணப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொரோனாவை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமை செயலாளர் இறையன்பு, செய்தி ஆசிரியர்கள், காட்சி ஊடக ஆசிரியர்கள் ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பேசிய முதல்வர், கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்கு முக்கியமானது எனவும், மருத்துவ நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடியையும் ஒரே நேரத்தில் நாம் எதிர்கொண்டு வரும் நிலையில் கொரோனா குறித்த செய்திகளை மிகுந்த எச்சரிக்கையுடன் ஊடகங்கள் வெளியிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க விரும்புவதாகவும், எதையும் மறைக்க கூடாது என அமைச்சர்களிடம் அதிகாரிகளிடம் தான் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் ஊடகங்களில் வெளியாகிய செய்திகளில் விழிப்புணர்வு காட்சிகளை வெளியிட வேண்டும் ஆனாலும் மக்களை அச்சுறுத்தாமல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார், முக கவசம் அணிந்திருப்பது போன்ற காட்சிகளை தொலைக்காட்சியில் அதிகம் வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் ஆம்புலன்ஸ் கட்டணம் குறித்தும் பேசியுள்ளார்.

தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால் தான் தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆனால் 108 ஆம்புலன்ஸுக்கு கட்டணம் கிடையாது. அப்படி இருக்கையில் 108 ஆம்புலன்ஸுக்கு கட்டணம் என தவறாக செய்தி பரப்பி வருவதாகவும், இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மக்களின் உயிர்காக்க ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும், அரசு குறித்த செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள், இருப்பினும் சந்தேகம் எழும் பொழுது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டு வெளியிடுங்கள் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும், தொடர் நாடகங்கள் மற்றும் செய்திகளை ஒளிபரப்பும் போது விழிப்புணர்வு வாசகங்களையும் சேர்த்து வெளியிட வேண்டும் எனவும் மக்கள் பயத்தில் ஆழ்ந்து விடாமல் விழிப்புணர்வுடன் இருப்பதற்கான நடவடிக்கைகளை ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதன் பின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கொரோனாவின் தீவிரம் மற்றும் அதனை தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போது தன் கேட்டுக்கொண்டதாகவும், மக்களின் நல்வாழ்வே நாட்டின் எதிர்காலம் எனவும் பதிவிட்டுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube