மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.500 விதிக்கப்படும் என மதுரை ஆட்சியர் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கொரோனாவின் தாக்கம் குறைந்ததால், பொதுமக்களிடையே முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது சற்று குறைந்து காணப்பட்டது. இந்த சமயத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் இனி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க உத்தவிட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று அறிவித்திருந்தார்.
அந்தவகையில், மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை முதல் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதன்படி, பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை மாநகராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை என 3 பிரிவுகளில் கண்காணிப்பு நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.