ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – ட்விட்டரை சாடிய ராகுல் காந்தி..!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டர் நிறுவனம் ஒருதலை பட்சமாக நடந்துகொள்கிறது என்று சாடியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறையை மீறியதாக அவரது ட்விட்டர் பக்கத்தை முடக்கியுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பக்கம் ஆகியவற்றையும் ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

இது தொடர்பாக தற்போது ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ட்விட்டர் நிறுவனம் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறது. மத்திய அரசின் சொல் கேட்டு நடக்கிறது. இந்த தாக்குதல் ராகுல்காந்தியின் மீது அல்ல. ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும்.

நாடாளுமன்றத்திலும் எங்களுக்கு பேசுவதற்கு உரிமை இல்லாமல், ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றன. நமது கருத்துக்களை சொல்வதற்கு சுதந்திரம் உண்டு என்று ட்விட்டர் நிறுவனத்தை நினைத்தேன். ஆனால், அவ்வாறு இல்லை, இது ஒரு வெளிப்படையான சமூக தளமாக இல்லாமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.