அயோத்தி வழக்கு ! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

அயோத்தி வழக்கில் 40 நாட்கள் நடந்த தொடர் வாதங்களுக்குப் பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.நாடு முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முன்பிருந்தே, அங்குள்ள 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது.
அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள, 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு,அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணையில் சமரசமான தீர்வு காணவேண்டும் என்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 நபர்கள் கொண்ட சமரசக்குழுவை  அமைத்து உத்தரவு பிறப்பித்தது.
அயோத்தி நில விவகாரம் தொடர்பாக  சமரசக்குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது .அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண இயலவில்லை அயோத்தி விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட 3 பேர் குழு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இதன் பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ,நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்றும்  அறிவித்தார்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இறுதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது. அதன்படி அயோத்தி வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து  40 நாள் தொடர் விசாரணை முடிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.