அடுத்த வாரத்திலிருந்து தமிழில் அர்ச்சனை- அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த வாரத்திலிருந்து அன்னை தமிழில் அர்ச்சனை என்பது செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக தலைவர்கள் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது அவர்களே இந்து சமய அறநிலைத்துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை கண்டு பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் விரைவிலேயே தமிழகத்தில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற விளம்பர பலகையுடன் 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறையை தொடங்க உள்ளோம். இந்த முறை முதலில் அடுத்த வாரத்தில் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்படவுள்ளது. மேலும், அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண் ஆகியவை தகவல் பலகையின் மூலமாக அனைவரும் அறிந்துகொள்ளும்படி வைக்கப்படும்.

தமிழில் அர்ச்சனை செய்யும் இந்த முறையை முதலில் தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் தொடங்கப்படவுள்ளதாகவும், பின்னர் சிறிய கோவில்களிலும் அதனை அடுத்து அனைத்து கோவில்களிலும் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடி மாத விழாக்களுக்கு  தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு பின்னர் முதலமைச்சர் கோவில்களை திறப்பது குறித்து முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.