கோடநாடு வழக்கில் போலீஸ் மேல்விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு…!

கோடநாடு வழக்கில் போலீஸ் மேல்விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அனுபவ் ரவி மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்ததான விசாரணையில் போலீஸ் மேல் விசாரணைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போலீஸின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி போலீஸ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள அனுபவ் ரவி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உள்ளதாகவும், அவர்கள் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்குமாறு பல தரப்பில் இருந்தும் தனக்கு மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு தரப்பில் 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடிவடைந்துள்ள நிலையில், கோர்ட் அனுமதியின்றி மேல் விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த வழக்கை விரைந்து முடிக்க விசாரணை கோர்ட்டுக்கு  உத்தரவிடுவதுடன், மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். மேலும் இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீஸ் விசாரணை நடத்த அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்து அனுபவ் ரவியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக அனுபவ் ரவி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் இந்த வழக்கை போலீஸ் மேல் விசாரணை செய்வது சட்டத்திற்குப் புறம்பானது எனவும், இது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அதை கருத்தில் கொள்ளாமல் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளதாகவும், கோடநாடு வழக்கை மேல் விசாரணை செய்வதற்கு போலீசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal