“வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம்;திமுக அரசின் கண்துடைப்பு நாடகம்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை….!

தமிழக அரசின் வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம் என்பது கண்துடைப்பு நாடகம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றை தினம் கால்நடை, வேளாண் மற்றும் மீன்வள ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அதன்படி,சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.இதனையடுத்து, தமிழக அரசின் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் முன்மொழிந்தார்.

அந்த தீர்மானத்தில்,3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த மூன்று சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இந்நிலையில்,தமிழக அரசின் வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம் என்பது கண்துடைப்பு நாடகம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர்பக்கத்தில் கூறியதாவது:

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக திமுக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக MLA கள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழக விவசாயிகள் எவரும் இந்த சட்டங்களை எதிர்க்காதபோதும்,மேலும், உண்மையில் மகிழ்ச்சியாக வேளாண் சட்டத்தை வரவேற்கும்போதும்,தமிழக மக்களுக்கு இது ஒரு திமுக அரசின் கண்துடைப்பு நாடகம் என்று தெரியும்”,என்று பதிவிட்டுள்ளார்.